இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் : அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபரை தேடும் சுங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 5, 2024

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் : அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபரை தேடும் சுங்கம்

தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான 7.70 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பஸ் நிலையம் அருகே வைத்து நேற்று (4) இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கையில் இருந்து சமீப காலமாக அதிக அளவு கடத்தல் தங்கம் நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு தலைமன்னாரில் இருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரைக்கு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே வந்து நின்ற நாட்டு படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பார்சலை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டு சென்றார்.
கடத்தல் தங்க கட்டிகளை பெற்றுக் கொண்ட நபர் இரு சக்கர வாகனத்தில் அதை எடுத்துக் கொண்டு இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடம் தர்கா அருகே சென்று கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த நபர் இரு சக்கர வாகனத்தை அவ்வழியாக சென்ற ஆட்டோவில் மோதி விட்டு தப்பிக் முயன்றுள்ளார். 

இதனை கண்ட அதிகாரிகள் அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது அதிகாரியை தள்ளிவிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து அந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள பையில் தங்க கட்டிகள் இருந்தது. தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து எடை போட்டு பார்த்ததில் அதில் சுமார் 7.70 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 4.50 கோடி ரூபாய் என்றும்,கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மன்னார் நிருபர்

No comments:

Post a Comment