விலங்குகளால் வருடந்தோறும் பில்லியன் கணக்கான உணவுப் பொருட்கள் அழிவு : சுற்றாடல் தொடர்பான அமைப்புகளின் எதிர்ப்பே காரணம் என்கிறார் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, October 5, 2023

விலங்குகளால் வருடந்தோறும் பில்லியன் கணக்கான உணவுப் பொருட்கள் அழிவு : சுற்றாடல் தொடர்பான அமைப்புகளின் எதிர்ப்பே காரணம் என்கிறார் மஹிந்த அமரவீர

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீதிமன்ற உத்தரவு காரணமாக குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றாடல் தொடர்பான அமைப்புகளின் எதிர்ப்பே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் விலங்குகளால் வருடந்தோறும் பில்லியன் கணக்கான உணவுப் பொருட்கள் அழிவடைவது தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நிரோஷன் பெரேரா எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்காகுப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீன நிறுவனம் ஒன்று இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

அந்த நாட்டில் தனியார் துறைக்குச் சொந்தமான மிருகக்காட்சி சாலைகள் ஆயிரக்கணக்கில் காணப்படுவதால் அதற்காகவே இந்த குரங்குகளை கொண்டு செல்வதற்கு அவர்கள் தீர்மானித்திருந்தனர். அதில் 2000 குரங்குகளை ஒரு மாதத்திற்குள் கொண்டு செல்வதற்கே உத்தேசித்திருந்தனர்.

அது தொடர்பில் நாம் பல மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அந்த வகையில் வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்ததாக இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்போது நாம் சீன தூதுவராலயத்தின் மூலம் அந்த வேண்டுகோளை விடுக்குமாறு சீன அரசாங்க பிரதிநிதிகளுக்கு தெரிவித்தோம்.

அந்த வகையில் எமக்கு உத்தியோகபூர்வமாக அந்த வேண்டுகோள் கிடைத்தது. அதேபோன்று சீனாவில் உள்ள எமது தூதுவருடன் கலந்துரையாடி அந்தளவு மிருகக்காட்சிசாலைகள் அந்த நாட்டில் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறும் கேட்டுக் கொண்டோம். அவர்களும் அந்த நாட்டில் பாரிய அளவில் மிருகக்காட்சிசாலைகள் உள்ளதாகவும் அவற்றுக்கு குரங்குகள் பெருமளவு தேவைப்படுவதாகவும் எமக்கு தெரிவித்திருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் உள்நாட்டில் வன விலங்குகள் தொடர்பான அமைப்புகளின் மூலம் பெறும் எதிர்ப்புகள் கிளம்பின. சில அமைப்புக்கள் சீன அரசாங்கம் மற்றும் அந்த நாட்டை விமர்சிக்கும் வகையில் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தன. குரங்குகளை இறைச்சிக்காக கொண்டு செல்கின்றார்கள். குரங்குகளின் மூளைக்கு அந்த நாட்டில் பெரும் கிராக்கி என்றெல்லாம் வதந்திகள் பரவத் தொடங்கின. சில அரசியல் தரப்பினரும் அதையே செய்தனர்.

மீண்டும் அதற்கான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டபோது சுற்றாடல் தொடர்பான அமைப்புக்கள் நீதிமன்றத்திற்கு சென்றன. அந்த வழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன் நீதிமன்றத்தின் மூலம் தற்காலிகமாக அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் உண்மையிலேயே குரங்குகளுக்கான பெரும் கேள்வி உள்ளது. மக்கள் மத்தியில் இருந்தும் இதற்கு பெரும் எதிர்ப்புகள் வரவில்லை.

வருடாந்தம் 2 மில்லியனுக்கு அதிகமான தேங்காய்கள் குரங்குகளினால் அழிக்கப்படுகின்றன. அத்துடன் பில்லியன் கணக்கில் பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. அந்த வகையில் சுற்றாடல் தொடர்பான அமைப்புகளின் எதிர்ப்பே குரங்குகளை அனுப்பும் நடவடிக்கைகள் தடைப்பட காரணமாக அமைந்துள்ளது.

எவ்வாறாயினும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி இவ்வாறு வன விலங்குகளால் உணவு உற்பத்திகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று வேறு நாடுகள் சிலவற்றிலும் இருந்து அந்த நாடுகளின் மிருகக்காட்சிசாலைகளுக்காக குரங்குகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் அந்த நாட்டு தூதுவராலயங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்குமாறு நாம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment