(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு இன்று (7) பாராளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது சட்டமூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது தினமாக உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் இடம்பெற்ற நிலையில் விவாதத்தின் இறுதியில் சட்டமூலத்துக்கு சபை அனுமதி அளிக்கின்றதா என சபைக்கு தலைமைதாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையை கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பு கோரினார்.
அதற்கமைய வாக்களிப்புக்கு செல்லுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிரகாரம் இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது சட்டமூலத்துக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீன உறுப்பினராக இருக்கும் ஏ.எல்.எம். அதாவுள்ளாஹ், நிமல் லான்சா ஆதரவாக வாக்களித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
அத்துடன் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, விமல் அணி, டலஸ் அணி எதிர்த்து வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாசிறி ஜயசேகர, தமிழ் தேசிய கூட்டமைப்பில் சாணக்கியன் எம்.பி மாத்திரமே சபையில் இருந்து சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. வாக்களிப்பில் மொத்தமாக 63 பேர் கலந்துகொண்டிருக்கவில்லை.
அதன் பிரகாரம் சட்டமூலத்துக்கு எதிராக 58 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது
No comments:
Post a Comment