ஜம்போரி தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 9, 2023

ஜம்போரி தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள்

கொரியக் குடியரசில் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் பங்கேற்கும் இலங்கை சாரணர் குழுவினர் நேற்று (08) சேமன்ஜியம் ஜம்போரி தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று (09) பிற்பகுதியில் கொரியக் குடியரசின் கரையைக் கடக்கவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ள கானுன் சூறாவளியைக் கருத்தில் கொண்டு இலங்கை சாரணர் குழுவினர் உள்ளிட்ட அதில் பங்கேற்க வந்திருந்த உலக நாடுகளைச் சேர்ந்த சாரணர்கள் இவ்வாறு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, சியோலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த குழுவினர் சியோலின் புறநகரில் உள்ள சியோனனில் உள்ள டாங்கூக் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதோடு, தமது புதிய தங்குமிடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைந்த இலங்கை சாரணர்கள், சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சில செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை அவர்கள் தமது புதிய இடத்திலிருந்து தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்போரியில் பங்கேற்கும் அனைத்து இலங்கை சாரணர்களினதும் தொடர்ச்சியான பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக, கொரியக் குடியரசில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சாரணர் குழுவின் நிர்வாகத்துடனும், சம்பந்தப்பட்ட தென் கொரிய அதிகாரிகளுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சூறாவளி எதிர்வுகூறல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக உலகெங்கிலும் உள்ள சுமார் 40,000 பதின்ம வயது சாரணர்களை இடமாற்றம் செய்வதற்கான ஒரு பாரிய நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (08) முன்னெடுத்திருந்தனர்.

37,000 சாரணர்களை ஏற்றிச் செல்ல 1,000 இற்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்படுத்தப்பட்டதாக, அந்நாட்டின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லீ சாங்-மின் தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்கள், 273 பொலிஸ் ரோந்து வாகனங்கள் மற்றும் 4 பொலிஸ் ஹெலிகொப்டர்களின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதோடு, பங்கேற்பாளர்கள் நாடு முழுவதும் 128 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஓகஸ்ட் 01 முதல் ஓகஸ்ட் 12 வரை 12 நாட்கள் இடம்பெறும் இந்நிகழ்வு தொடர்பான குறித்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

உலக சாரணர் ஜம்போரி, நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள Saemangeum இல் ஒரு மாபெரும் தற்காலிக முகாமில் நடத்தப்பட்டது, இதில் பங்கேற்பாளர்களுக்கு, பெரும்பாலான பாடசாலை மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள், கலாசார நிகழ்ச்சிகள், நிலைபேண்தகு பட்டறைகள் உள்ளிட்ட விடயங்ககள் இடம்பெறுகின்றது.

No comments:

Post a Comment