(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஆகவே, ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கமாக செயற்படுவோம். பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விரிசல் நிலை தோற்றம் பெற்றுள்ளது. வெகுவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், தேசிய ஊடகங்களிலும் வெளியாகிய செய்தி அடிப்படையற்றது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் எமது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவை தோல்வியடைந்ததை அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாரிய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தார்கள்.
பொருளாதார நெருக்கடி பாரிய அரசியல் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. இதனை ஒரு தரப்பினர் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக மாற்றியமைத்தார்கள்.
கடந்த ஆண்டு நாட்டில் சட்டம், ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படவில்லை. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைக்கலாம் என்ற மோசமான நிலை காணப்பட்டது. சட்டம் ஒழுங்கை முறையாக செயற்படுத்தாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது.
இவ்வாறான பின்னணியில் நாட்டில் ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்காகவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் நாட்டில் ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தினார்.
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண ஜனாதிபதி வகுத்த திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன. நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆகவே அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடு என குறிப்பிடப்படுவது அடிப்படையற்றது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆகவே, அரசியல் ரீதியில் முரண்பாடுகளை நாங்கள் தோற்றுவிக்கப் போவதில்லை. ஜனாதிபதியுடனும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணக்கமாகவே செயற்படுவோம் என்றார்.
No comments:
Post a Comment