வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாத 24,000 கிலோ அப்பிள் பழங்கள், தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தீர்மானத்திற்கமைய அவற்றை அமைச்சர் நேற்று தெஹிவளை மிருககாட்சிசாலை அதிகாரிகளிடம் கையளித்தார்.
கொழும்பு சர்வதேச துறைமுகத்தின் சி.அய்.சி.டி பகுதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் சீனாவிலிருந்து ஆப்பிள் கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அப்பிள் கொள்கலன்களை இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து CICT (கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள்) நிறுவனத்திடம் நடாத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இவற்றை மிருகக்காட்சிசாலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது போன்று இன்னும் பல பொருட்கள் வீணாக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதனை பிரயோசனமான ஒரு விடயத்துக்காக பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் துறைமுக அதிகாரிகளுக்கு இதன்பொழுது பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்த கொள்கலன்களில் 24,000 கிலோ கிராம் அதாவது சுமார் ஒரு இலட்சம் அப்பிள்கள் இருப்பதாக CICT நிறுவனத்தின் பிரதானி ஜெக் உவாங் தெரிவித்தார்.
குறித்த அப்பிள் தொகை, சுமார் ரூ. 2 கோடி பெறுமதி வாய்ந்தவையென துறைமுகத்தின் பணிப்பாளர் பிரபாத் ஜயந்த தெரிவித்தார்.
No comments:
Post a Comment