(நா.தனுஜா)
அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், மிகப்பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகவும் காட்டமான முறையில் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்டவர்கள், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 'மைனா கோ கம' கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர்.
அதனைத் தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம'விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டுவந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இன்றையதினம் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஆயுதங்களையும் தடிகளையும் ஏந்திய குழுவொன்று அலரி மாளிகையிலிருந்து காலி முகத்திடலை நோக்கி நகர்வதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்கள் அலரி மாளிகைக்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் பொலிஸாரையும் வலியுறுத்துகின்றோம்.
இந்த நிலைவரத்தை உரியவாறு கையாள்வதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று அவ்வறிக்கையின் ஊடாக சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment