புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : வெளியானது பல தகவல்கள் : பல கோணங்களில் இடம்பெறும் விசாரணைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, May 30, 2022

புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : வெளியானது பல தகவல்கள் : பல கோணங்களில் இடம்பெறும் விசாரணைகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகே, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனை தெரியும் தூரத்தில், நேற்று திங்கட்கிழமை (30) முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மற்றொரு முன்னாள் வீரர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் நேரடி கட்டுப்பாட்டில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், லக்ஷித்த விதாரண லியனகே எனும் இராணுவத்தின் முன்னாள் விஷேட படையணி வீரரான அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவராவார். இதன்போது காயமடைந்த மற்றையநபரும் இராணுவத்தின் விஷேட படையணியின் முன்னாள் வீரராவார்.

சம்பவத்தின் போது ரி 56 ரக துப்பாக்கியால் சுமார் 10 இற்கும் அதிகமான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை ( 30) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில், பி 84471/17 எனும் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

இது கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட விஜேராம மாவத்தையில் இரவு நேர களியாட்ட விடுதியொன்றின் முகாமைத்துவத்துடன் முரண்பட்டு அந்த களியாட்ட விடுதியை தாக்கி சேதப்படுத்திய விவகாரமாகும்.

சம்பள பிரச்சினையை மையப்படுத்தி அச்சம்பவம் பதிவானதாக கூறப்படுவதுடன், அதனை மையப்படுத்திய வழக்கொன்று தொழிலாளர் நீதிமன்றிலும் உள்ளது.

அவ்வழக்கில் அங்கு சேவையாற்றிய இராணுவத்தின் விஷேட படையணியின் முன்னாள் வீரர்கள் நால்வர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் நேற்றையதினம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வருகை தந்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நால்வரையும் இலக்கு வைத்து நடாத்தப்பட்டுள்ளது. இதில் இருவர் எந்த காயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கும் குறித்த வழக்கிற்கும் இடையே ஏதும் தொடர்புகள் உள்ளனவா எனும் கோணத்தில் பிரதான விசாரணை இடம்பெறுவதுடன் மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் இடம்பெறுவதாக கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment