பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மலையக மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற் கட்டமாக ஜனவரி மாத நடுப்பகுதியில் 300 காணி உரிமைப் பத்திரங்கள் நுவரெலியா மாவட்ட மலையக மக்களுக்கும், 200 காணி உரிமைப் பத்திரங்கள் கண்டி மாவட்ட மலையக மக்களுக்கும், வழங்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி அமைப்பின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி வீரகேசரிக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அடுத்தாண்டுடன் 200 வருட பூர்த்தியாகின்றபோதிலும், எமது மலையக மக்கள் இன்னமும் காணி உறுதி இல்லாமல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிக் கொடுத்த லயன் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றமை பெரும் வேதனையாக இருக்கிறது. இந்நிலைமையை மாற்றியமைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகிறது.
2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பெ.சந்திரசேகரன் ஆகியோரினால் தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதேபோல், நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் தனி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
இவ்வாறு மொத்தமாக 40 ஆயிரம் தனி வீடுகள் இதுவரையிலும் மலையகப் பகுதிகளில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு காணி உரிமைப் பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அயராது உழைத்து வருகின்றனர்.
அதன் பலனாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மலையக மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
இதன் முதற் கட்டமாக 500 காணி உறுதிப் பத்திரங்கள் ஜனவரி மாத நடுப்பகுதியில் வழங்கப்பட்டவுள்ளது. இதன்டி நுவரெலியா மாவட்ட மக்களுக்கு 300 காணி உரிமைப் பத்திரங்களும், கண்டி மாவட்ட மலையக மக்களுக்கு 200 காணி உரிமைப் பத்திரங்களும் வழங்கப்படவுள்ளது. இதனைப் போலவே, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி,பதுளை, காலி ,மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் பெற்றுக் கொடுப்போம்.
இந்த காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளுக்கான சகல செலவுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுள்ளது.
எமது மலையக மக்கள் காலத்துக்கு காலம் பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்பட்டு வருவதை அதிகாமக கூறத் தேவையில்லை. ஆரம்பத்தில், அதாவது ஆங்கிலேயர் காலத்தில் அடிமைகள் போல் நடத்தப்பட்டு எமது முன்னோர்களது இரத்தத்தையும், வியர்வையும் உறிஞ்சி வேலை வாங்கியிருந்தனர்.
இதையடுத்து நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை குடியுரிமை அந்தஸ்து கிடைக்கப் பெறாமல் இருந்தது. பின்னர், இலங்கை குடியுரிமை அந்தஸ்து கிடைத்தது. இலங்கை தேசிய அடையாள அட்டையில் X எனும் ஆங்கில எழுத்துடன் இந்திய வம்சாவளி எனும் அடையாளம் காணப்பட்டது. தற்போது அந்த X எனும் குறியீடு இல்லாமல் தனியே இலக்கங்கள் மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு எமது மக்களுக்கான ஒவ்வொரு தேவைகளையும் போராடியே பெற்றுக் கொண்டோம். இவற்றைப் போலவே காணி உரிமைப் பத்திரங்களையும் நாம் எமது மலையக மக்கள் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்போம்.
மேலும், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளிலும் எமது மக்கள் மேம்படுத்தப்படுவதே எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸினது பிரதான நோக்கமாகும்.
No comments:
Post a Comment