அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றி வரும் அனைத்து பொலிஸாரையும் உடனடியாக இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம் பெற்றுவருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி இரவு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் பொலிஸார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பொலிஸார் உயிரிழந்ததுடன் 3 பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸ் சார்ஜென்ட் துப்பாக்கிகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, பொலிஸ்மா அதிபர், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் முதலில் இடமாற்றுமாறு , பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் கீழ், கட்டம் கட்டமாக கடமையாற்றி வரும் பொலிஸாரை இடமாற்றும் நடவடிக்கை நேற்று (30) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உட்பட சிலர் உடனடியாக வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(பைஷல் இஸ்மாயில்)
No comments:
Post a Comment