நீதித்துறை மேம்பாட்டுக்காக இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை சாத்தியமாக முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதித்துறையில் பல்வேறு வேலைத் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நிதி பெருமளவு உறுதுணையாக அமையும்.
சுமார் 70 ஆண்டுகளுக்குப்பின் நீதித்துறையில் பெரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மனித வள அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவற்றை சாத்தியமான வகையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் சிறந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment