மக்களை சரியாக வழிப்படுத்துவதில் இலங்கை வானொலி காத்திரமான பங்களிப்பு - அமைச்சர் டக்ளஸ் புகழாரம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 25, 2021

மக்களை சரியாக வழிப்படுத்துவதில் இலங்கை வானொலி காத்திரமான பங்களிப்பு - அமைச்சர் டக்ளஸ் புகழாரம்

மக்களுக்கு சரியான செய்திகளை வழங்கி இக்கட்டான காலட்டங்களில் மக்களை சரியாக வழிப்படுத்துவதில் இலங்கை வானொலியின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்திருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகிய இணைந்து நேற்று (24.10.2021) நடத்திய முப்பெரும் விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 71 ஆவது ஆண்டு நிறைவு, முஸ்லிம் சேவையின் 60 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹாட்சன் சமரசிங்கவின் பிறந்த தினம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இடம் பெற்ற முப்பெரும் விழாவில், தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையானது தமிழ் வானொலித் துறைக்கான முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்ததுடன் குறித்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களையும் நினைவு படுத்தினார்.

இலங்கை வானொலியினால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றினை நினைவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர், அவ்வாறான நிகழ்ச்சிகள் இலங்கைக்கான அடையாளமாக விளங்கி வருவதனையும் சுட்டிக்காட்டினார்.

இக்கட்டான காலகட்டங்களில் மக்களுக்கு சரியான செய்திகளை வழங்கி மக்களை வழிநடத்துகின்ற தேசியக் கடமையினை இலங்கை வானொலி மேற்கொண்டமையை சுட்டிக்காட்டியதுடன், அதற்காக கே. எஸ். ராஜா மற்றும் றேலங்கி செல்வராஜா போன்றோர் கொலை செய்யப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

90 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை வானொலியுடன் தனக்கிருக்கும் தொடர்புகளை நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் திறமையான வழிகாட்டலுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இவ்வாறு கடந்த 71 வருடங்களாக நீண்ட பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை வானொலி எதிர்காலத்திலும் தன்னுடைய தனித்துவத்தினை பாதுகாத்து தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment