ராஜரத்தினம் சுரேஷ்குமார்
தென்னிந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழகத்தின் முதலமைச்சர் மு.கா ஸ்டாலினை 01.09.2021 சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இச் சந்திப்பின் போது தமிழ் நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்து வாழும் மலையகத்திற்கும் இடையிலான இரு தரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக காங்கிரஸின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் மலையகத்தில் அமையவுள்ள பல்கலை கழகத்திற்கும், தமிழ் நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பாக விரிவாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தழிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்வதற்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் இந்திய சட்டபேரவையில் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு, தொழில் வாய்ப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பாக நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம்மக்களுக்கு அறிவித்துள்ள நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதாவும், இத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கும் பரிந்துரைப்பதாகவும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமுர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுடன் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது என தெரிவித்துள்ள ஊடக அறிக்கை
மேலும் இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதிப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குமிடையிலான உறவு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் மூலமும் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் மூலமும் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை பிறந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment