(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரையில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் சடலங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில், நேற்று வரை இவ்வாறு கரை ஒதுங்கிய 31 கடலாமைகள், 5 டொல்பின் மீன்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
இதில் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டின. அத்துடன் மிக கவலைக்கிடமான நிலையில் உள்ள இரு ஆமைகளுக்கு தற்போதும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
இதனைவிட சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்து கரை ஒதுங்கிய 5 டொல்பின்கள், பாறை மீன், வேறு சில மீன் வகைகள், கடல் வாழ் பறவைகள் என பல உயிரினங்கலின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
பங்குனி ஆமை (Olive Ridley Turtle), அலுங்காமை (Hawksbill Turtle), பெருந்தலை ஆமை (Loggerhead Turtle), ஏழுவரி ஆமை அல்லது தோனி ஆமை (Leather back Turtle), ஒங்கில் ஆமை (Green Turtle), கெம்பஸ்ரிட்லி (Kemp’s Ridley), தட்டைமுதுகு ஆமை (Flat back Turtle) ஆகிய ஏழு வகையான கடலாமை வகைகளில் தட்டை முதுகு ஆமை, கெம்பஸ் ரிட்லி ஆமை ஆகிய வகைகளைத் தவிற ஏனைய ஐந்து வகையான ஆமைகளும் இலங்கை கடற்பரப்பில் அதிகளவு உயிர் வாழ்கின்றன.
இந்நிலையில் தற்போது இறந்து கரை ஒதுங்கியுள்ள கடலாமைகளில் மூன்று வகையான ஆமைகள் காணப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டின.
மன்னார் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கியுள்ள நிலையில், இவை பதிவான எண்ணிக்கை மட்டுமே என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
வௌ்ளவத்தை, தெஹிவளை, மொறட்டுவை, எகொட உயன, பாணந்துறை, கொஸ்கொட, இந்துருவ, காலி, உனவட்டுன, குடாவெல்ல, மாரவில மற்றும் துடாவெவ உள்ளிட்ட கடற் கரைகளில் கரையொதுங்கிய ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் சடலங்கள் மீட்கப்ப்ட்டுள்ளதாக அரிய முட்கின்ரது.
கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார கூறினார்.
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் காணப்படுவதால் அவற்றிற்கான நட்டஈட்டை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்தது.
வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, கடலில் மூழ்கும் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன குறிப்பிட்டார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏர்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயனங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்க்ப்பட்டுள்ளன.
இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக் கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் இதுவரை கடலாமைகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என கண்டறியப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் கடலாமைகளின் உடற் பாகங்கள் மேலதிக ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன..
இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தொடர்ச்சியாக பல கடலாமைகலில் உடற் பகுதிகள் கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவற்றை பகுப்பாய்வு செய்ய சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment