முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பிரஜா உரிமையை பறிக்க அரசாங்கம் திட்டம் : ஆட்சிக்கு வர வழிசமைத்தமைக்காக சஹ்ரானின் படங்களை காட்சிப்படுத்தி பாராளுமன்றத்தில் கொண்டாடினார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பிரஜா உரிமையை பறிக்க அரசாங்கம் திட்டம் : ஆட்சிக்கு வர வழிசமைத்தமைக்காக சஹ்ரானின் படங்களை காட்சிப்படுத்தி பாராளுமன்றத்தில் கொண்டாடினார்கள் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

2015 அரசாங்கத்தை உருவாக்கிய சூத்திரதாரிகளின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கி அரசியல் பழிவாங்கும் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் மேற்கொள்வதில்லை. அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர வழிசமைத்த சஹ்ரானின் படங்களை காட்சிப்படுத்தி பாராளுமன்றத்தில் கொண்டாடியுள்ளார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதி வரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் அரசாங்கம் தனது அரசியல் விராேதிகளை இல்லாமலாக்க திட்டமிட்டிருப்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதி ஹிட்லர் போன்று செயற்பட வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் சிலர் தெரிவிக்கின்றனர். ஹிட்லர் அன்று ஒரு இரவில் தனது அரசியல் விராேதிகள் அனைவரையும் இல்லாமக்கி இருந்தார். அதேபோன்று இந்த அரசாங்கம் ஒரு அறிக்கை மூலம் தனது அரசியல் விராேதிகளை இல்லாமலாக்க திட்டமிட்டிருக்கின்றது.

மேலும் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கப்போவதாக தெரிய வருகின்றது. எதிர்க்கட்சியில் இருக்கும் ஒரு தலைவர்தான் அனுரகுமார திஸாநாயக்க. அவரின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கி அவரது அரசியல் நடவடிக்கையை நிறுத்த முடியாது.

அதேபோன்று ஆர். சம்பந்தனின் பிரஜா உரிமையை இல்லாமலாக்கி வடக்கு மக்களுக்கு அரசாங்கம் எதை சொல்லப்போகின்றது. ஜனநாயக முறை சரியில்லை, மீண்டும் ஆயுதம் தூக்கவா தெரிவிக்கப் போகின்றீர்கள்?. மேலுமொரு பிரபாகரனை உருவாக்கப் போகின்றீர்களா?

மேலும் சுமந்திரனுக்கு இன்றும் சர்வதேச புலி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. ஒற்றையாட்சிக்கு ஆதரவாக செயற்படும் ஒரு தலைர். அவரது பிரஜா உரிமையை இல்லாமலாக்கி பிரபாகரன் போன்றவர்களை உருவாக்குவதா அரசாங்கத்தின் திட்டம்.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவராக ரவூப் ஹக்கீம் ஒரு நடுநிலையான ஜனநாயக தலைவர். முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொர்பில் அரச தரப்பினர் அதிகம் கதைக்கின்றனர். ரவூப் ஹக்கீம் போன்ற தலைவரது பிரஜா உரிமையை இல்லாமலாக்கி, சஹ்ரான்களை உருவாக்கப் போகின்றதா. 

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமாரக செயற்பட்ட தலைவர். அவரது பிரஜா உரிமையை இல்லாமாக்குவதன் நோக்கம் என்ன?

அதேபோன்று எதிர்க்கட்சியில் இருக்கும் சரத் பொன்சேகா, ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள்தான் 2015 அரசாங்கம் உருவாகுவதற்கு பிரதான சூத்திரதாரிகளாகும். அதனால்தான் அவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களது பிரஜா உரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஆனால் ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக சஹ்ரான் உட்பட குழுவின் படத்தை பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தி நேற்று (நேற்று முன்தினம்) கொண்டாடினார்கள். இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு வழிசமைத்தமைக்காக இவர்கள் சஹ்ரானை கொண்டாடினார்கள்.

மேலும் ஏப்ரல் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க கடும் முயற்சியுடன் செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவுக்கு இந்த அரசாங்கம் தண்டனை வழங்கி இருக்கின்றது. அரச அதிகாரிகளை இவ்வாறு செயற்படுத்தும்போது பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக செயற்பட முடியும்?

அதேபோன்று நீதிமன்ற அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு எடுத்துக் கொண்டு வழக்கு தீர்ப்புகளை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் நாடு சர்வதேச ரீதியில் நகைப்புக்குள்ளாகின்றது. 

அரசாங்கத்தின் இவ்வாறான முட்டாள்தனமான நடவடிக்கைகள் காரணமாகத்தான் மனித உரிமை ஆணைக்குழுவினால் எமது நாடு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச நீதிமன்றம் அமையும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

எமது நாட்டின் உள்ளக பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல நாங்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டோம். ஆனால் நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் இடம்பெறுமானால், அதன் காரணமாக சர்வதேச நீதிமன்றம் அமைவதை எங்களால் தடுக்கவும் முடியாது.

எனவே ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் கலாசாரத்தை இல்லாமலாக்க வேண்டும். அதுவே எமது கட்சியின் கொள்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment