ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டொலர் கொரோனா நிவாரண நிதி - பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது - சட்ட மசோதாவில் இன்று கையெழுத்திடுகிறார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டொலர் கொரோனா நிவாரண நிதி - பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது - சட்ட மசோதாவில் இன்று கையெழுத்திடுகிறார் ஜோ பைடன்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி டொலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் கொண்டு வந்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. உலக அளவில் கொரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டொலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.

இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. 

இதையடுத்து இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இது குறித்து அதிபர் ஜோ பைடன் கூறியதாவது இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் வழங்கும் பணி தொடங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும், என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘அமெரிக்கர்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும். பின்னர் உபரி இருந்தால் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment