(இராஜதுரை ஹஷான்)
ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்களை வழங்கும் கொள்கை திட்டத்துக்கு அமைய இதுவரையில் 38 ஆயிரம் பேருக்கு தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகுதியாகவுள்ள 62 ஆயிரம் பேருக்கு விரைவில் தொழில் நியமனம் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்வித் தகைமையில்லாத இளைஞர் யுவதிகள் 1 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்தின் சுபீட்சமான கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. கல்வி தகைமையில்லாதவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே 1 இலட்சம் பேருக்கு அரச தொழில்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டன. கிராம சேவகர், இராணுவத்தினர் ஊடாக கடந்த காலங்களில் நேர்முகப் பரீட்சை பல பிரதேசங்களில் இடம்பெற்றன. இதனடிப்படையில் இதுவரையில் 38 ஆயிரம் பேருக்கு தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக 1 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு என்ற இலக்கினை அடைய முடியவில்லை. 68 ஆயிரம் பேருக்கு தொழில் நியமனம் விரைவில் வழங்கப்படும்.
அரசியல் காரணிகளை கொண்டு இவ்வாறு தொழில் நியமனம் வழங்கப்படவில்லை. கல்வி தகைமையில்லாதவர்களும் அரச சேவையில் ஈடுபட வேண்டும். நியமனம் வழங்கப்படும் 1 இலட்சம் பேருக்கும் அரச சலுகைகள் முழுமையாக வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment