கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஶ்ரீலங்கன் விமான சரக்கு பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஶ்ரீலங்கன் சரக்கு பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு இன்று காலை கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதன் முடிவுகளுக்கு அமைய, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படும் ஊடக அறிக்கையை உறுதிப்படுத்தவுள்ளதாக, ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது
குறித்த ஊழியர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சையை பெற்று வருகின்றார்.
குறித்த ஊழியர், வெளிநபர் ஒருவரிடமிருந்து தொற்றுக்குள்ளானதாக நம்பப்படுகின்றது.
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த ஊழியருடன் பணியாற்றி வந்த 50 பேர் இதுவரையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், அரச கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு பிரிவின் ஆலோசனைகளுக்குஅமைய, தமது பணியாளர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்கு விமான சேவை நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு, சுகாதார மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment