(செ.தேன்மொழி)
திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களை முற்று முழுதாக ஒழிக்கும் நோக்கில் நாடு பூராகவும் 24 மணித்தியாலயமும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதுடன், அதன் மூலம் அவர்கள் சேகரித்து வைத்துள்ள சொத்துக்களை அரசுடமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை முற்று முழுதாக ஒழிக்கும் நோக்கில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது பெருந்தொகையான போதைப் பொருட்கள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சுற்றிவளைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மேற்பார்வையின் கீழ் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்தமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டாலும், பெருந்தொகையான போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொலிஸாரின் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாரியளவான போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதுடன், இதன் மூலம் அவர்கள் சேகரித்து வைத்துள்ள சொத்துகளை அரசுடமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்புகளுக்கு தேவையான தகவல்களை அரச புலனாய்வு பிரிவு , பொலிஸ் புலனாய்வு பிரிவு மற்றும் மேல் மாகாண புலனாய்வு பிரிவினரால் வழங்கப்படுவதுடன், கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவும் இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருக்கின்றது.
கடந்த காலங்களில் கைப்பற்றியதையும் விட தற்போது பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் இவ்வாறான கடத்தல்களை திட்டமிடும் நபர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிரிஹான பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து பெருந்தொகையான பணத் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்திருந்து. இந்த பணம் தொடர்பில விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த பணம் யாருடைய வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்பதனை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு எதிராக கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பை அண்மித்த பகுதிகளில் இயங்கும் பாதாள குழுக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவை தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை கிராம பகுதிகளில் கத்தி மற்றும் வாள்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இதுவரையில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் கப்பம் பெறுதல் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுப்படும் நபர்கள் தொடர்பிலும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment