(நா.தனுஜா)
கருணா அம்மானைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் சிறந்த நகைச்சுவைகளைக் கூறிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவரைக் கைது செய்வதைத் தடுப்பதற்காக முனைப்புடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக தேசபக்தியும், சட்டத்தின் ஆட்சியும் கேலிக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடுமையாகச் சாடியிருக்கிறார்.
ஆனையிறவுத் தாக்குதலின் போது ஒரே இரவில் 2000 - 3000 இராணுவ வீரர்களைக் கொன்றதாகவும், எனவே தான் கொரோனாவை விடப் பயங்கரமானவன் என்றும் கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்ட கருத்து அண்மையில் பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
ஏற்கனவே கருணா அம்மானின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்த சம்பிக்க ரணவக்க, தற்போது கருணா அம்மானைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, தமது நண்பரான கருணா அம்மானால் பகிரங்கமாக வெளியிடப்பட்ட தீவிரவாதக் கருத்தாடல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வித பதில்களையும் கொண்டிருக்காத அதேவேளை, அவரைப் பாதுகாப்பதற்காக அக்கட்சியைச் சேர்ந்த அரசியல் கோமாளிகள் சிறந்த நகைச்சுவைகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றனர்.
தற்போது கருணாவைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. இதனூடாக தேசபக்தியும், சட்டத்தின் ஆட்சியும் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment