அரச, தனியார், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த அரசாங்கம் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

அரச, தனியார், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த அரசாங்கம் இணக்கம்

(எம்.மனோசித்ரா) 

அரச, தனியார் துறையினர் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 

தொழிலாளர் போராட்ட இயக்கத்திற்கும் அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்குமிடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

தொழிலாளர் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட குழுவினருக்கும் அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்குமடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் துமிந்த நாகமுவ தெரிவிக்கையில், 

பெரும்பாலான நிறுவனங்கள் பெப்ரவரி, மார்ச் மாதத்துக்கான சம்பளத்தை வழங்கியுள்ளன. சில நிறுவனங்கள் வழங்கவில்லை. அதேபோன்று எதிர்காலத்தில் சம்பளத்தை வழங்காமல் இருப்பதற்கு சில நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 

நாம் இது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதில் மாவட்ட மட்டத்தில் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொழிற்சங்க அமைப்பு என்ற ரீதியில் நாம் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் உள்ளோம். 

அதேபோன்று சில நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்கள் தொழிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர். குறுஞ்செய்தி மூலம் தொழிலிலிருந்து நீக்கப்படுகின்றனர். தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் தொழில் புரிவோர் அவ்வாறு தொழிலிருந்து நீக்கப்பட முடியாது. இது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார். 

அத்தோடு ஊழியர் சேமலாப நிதியை (இ.பி.எப் பணத்தை) தொழிலாளர்களுக்கு விடுவிப்பதற்கு அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த யோசனை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த திட்டத்தின் நோக்கம் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக்குவதல்ல என்றும், இந்த நிதி விடுவிக்கப்படுவது லீசிங் மற்றும் கடன் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கும், சம்பளம் வழங்கப்படாத நிறுவனங்களில் தொடர்ந்தும் இ.பி.எப் பணத்தை அறவிடாமலிருப்பதற்குமாகும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார். 

இந்த யோசனை தனிப்பட்ட கருத்தேயன்றி அரசாங்கத்தின் தீர்மானமல்ல என்பதையும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும் எதிர்கால வைப்பு நிதியை விடுவிக்கும் இந்த யோசனைக்கு தொழிலாளர் போராட்ட இயக்கம் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகக் கூறினோம். 

எவ்வித நிவாரணமும் கிடைக்கப் பெறாத பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள தகுதியான பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பிலும் ஆராய்வதாக அமைச்சர் கூறினார் என்றார்.

No comments:

Post a Comment