சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சீனாவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்படுகிறது.
இதற்காக மும்பையில் இருந்த போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 400 பேர் வரை பயணிக்கலாம். முக்கியமான நபர்கள் இந்த விமானத்தில் அழைத்து வரப்பட உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் இதில் அதிகம் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இந்த விமானம் சீனாவில் நோய் பாதிக்கப்பட்டு இருக்கும் வுஹன் நகரத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதில் 15 இந்திய அதிகாரிகள் செல்ல உள்ளனர். பயணிகளை சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வுஹன் நகரத்திற்கு உலக நாடுகள் எல்லாம் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியா மட்டும்தான் விமான போக்குவரத்தை இந்த மீட்பு பணிக்காக மேற்கொள்கிறது.
இந்த நிலையில் இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 15 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 15 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு வைரஸ் ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை என்பது உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 4 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 4 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment