“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கில் அவருக்குப் பாதகமான தீர்ப்பு கிடைக்குமானால் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டு வேட்புமனுத் தாக்கல் பத்திரங்களை சமர்ப்பிக்க கட்சி ரீதியில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகைமைகள் காணப்படுகின்றன. அவர் போட்டியிடும் பட்சத்தில் ஏற்படும் சட்டச் சிக்கல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச சட்ட நிபுணர்களிடம் ஏற்கனவே ஆலோசனையைப் பெற்றே அவரை ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இரட்டைப் பிரஜாவுரிமையை உடையவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியானால் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் இரட்டைக் குடியுரிமை உடையவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியாது என்பது வரவேற்கத்தக்கது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், தற்போது இலங்கைக் குடியுரிமையை தொடர்புபடுத்திய சட்டச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கோத்தபாயவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் சிவில் செயற்பாட்டாளர்களினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குத் தாக்கல் மூவர் அடங்கிய நீதிபதிகளினால் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஒருவேளை பாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மாற்று நடடிக்கையை மேற்கொள்வது சாதாரண விடயமாகும். இதனடிப்படையில் இம்மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாமல் போனால் , அக்கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்ய தற்போது கட்சி மட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.
No comments:
Post a Comment