பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் 05.10.2018 இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணிநேரம் வரை முன்னெடுத்தனர்.
தோட்டத் தொழிலாளர்களை வழமைபோல் ஏமாற்றாமல் நியாயமான சம்பளத்தினை பெற்றுத் தரவேண்டுமெனவும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சுவார்த்தையினை நடாத்தி ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுத் தரவேண்டுமெனவும் அவ்வாறு பெற்றுத் தராவிடின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தயார் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஏனைய துறையினருக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுக்கும் இந்த அரசாங்கம் ஏன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் புறக்கணிப்பு செய்கின்றது என தொழிலாளர்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
மலையகத்தில் உள்ள எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
க.கிஷாந்தன்
No comments:
Post a Comment