ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஜாதி பேதம் கிடையாது வாகனேரியில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 5, 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஜாதி பேதம் கிடையாது வாகனேரியில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஜாதி பேதம் கிடையாது. அக்கட்சி நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்குமான பொதுவான கட்சியாகும் என நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ, அனர்த்த நிவாரண அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட வாகனேரி தவனைக்கண்டம் பகுதியில் இடம்பெற்ற அறுவடை பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்போது ஆட்சியமைத்தாலும் அதில் சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளைக் கௌரவித்த வரலாரே உள்ளது. கல்வியமைச்சராக பதியூதின் மஹ்மூது, வெளிநாட்டு அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமர் போன்றவர்களுக்கு முக்கியமான அமைச்சுக்களை வழங்கியுள்ளது. ஜாதி, பேதமற்ற கட்சி என்பதற்கு இது போன்ற பல விடயங்கள் உள்ளது.
இந்த நாட்டில் முதன் முறையாக சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து தெரிவு செய்த ஜனாதிபதி தான் இன்றைய ஜனாதிபதி. இவர் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்றபடியினால் விவசாயிகளின் கஸ்டங்கள் அவருக்கு நன்கு தெரியும். அதனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்களது பிரச்சினைகள் நிறைவேற்றப்படுவதுடன், நிச்சயம் விவசாயம் அபிவிருத்தி செய்யப்படும்.

நாட்டில் அனுராதபுரம், பொலநறுவை, அம்பாரை மாவட்டங்களில் நெல் சந்தைப்படுத்தும் சபையால் உரிய காலத்தில் நெல் கொள்வனவு செய்யப்படுவது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென்றும் நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதனாலா எங்களை புறக்கணிக்கின்றார்கள் என்று விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

அவ்வாறானதொரு நிலைப்பாடு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இல்லை. இந்த அரசாங்கத்தல் சிங்களவர், தமிழர், முஸ்லீம் என்ற வேறுபாடு கிடையாது. நாமனைவரும் இலங்கையர் என்ற செயற்பாடே நல்லாட்சி அரசாங்கத்திடமுள்ளது உங்கள் நெல் கொள்வனவு தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கதைத்துள்ளேன். அவ்வாறான பிரச்சினைகள் இனி மேல் நடக்காது.
எரிக்கலம்கட்டு பாலம் புனரமைப்புச் செய்யப்படுவதுடன், அதற்கான வீதி அமைக்கப்படும். கிரான்புல்சேனை அணைக்கட்டும் முதற்கட்டமாக விவசாயிகளின் நலன்கருதி செய்து தரப்படுவதுடன், விவசாயிகள் முன்வைத்த யானை வேலி, வாய்க்கால் புனரமைப்புக்கள் போன்ற விடயங்கள் கட்டங்கட்டமாக செய்து தரப்படுமென்றும் தெரிவித்தார்.

கல்லடி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி மாணவிகளது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, அதிதிகள் விவசாய அமைப்புக்களினால் பெண்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.மோகனராஜா அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் அமலநாதன் மற்றும் நீர்ப்பாசத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment