மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் 24 மணி நேரத்திற்குள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அவ்வெதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று இன்று மூன்று வருடங்களாகின்றன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்க அனுசரனையில் இடம்பெற்ற பாரிய மோசடியாக அது உள்ளது. எனினும் குறித்த மோசடியின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் அளுநர் அர்ஜுன மகேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லையென இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்குத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரில் வசித்த வீட்டில் அவர் தற்போது இல்லை எனவும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகேந்திரனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. குறித்த திகதியில் அவர் ஆஜராகாமையினால் மீண்டும் மார்ச் மாதம் எட்டாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் வீட்டில் இல்லாததனால் சித்தாரிசு வழங்குவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகவே இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இது தற்போது உருவெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment