சிரியாவில் மோதல்களால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களிலுள்ள மக்களுக்கென ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச தொண்டு ஸ்தாபனங்களால் வழங்கப்பட்ட உதவிகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் பலரால் அங்குள்ள பெண்கள் பாலியல் ரீதியான சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தால் சிரியாவில் நடத்தப்பட்ட பாலின ரீதியான ஆய்வொன்றிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையானது 'சிரியாவிலிருந்து குரல்கள் - 2018' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆண்கள் நிவாரண உதவிகளாக தொண்டு ஸ்தாபனங்களால் வழங்கப்பட்ட உணவுகளை பணத்திற்காக விற்பதற்கும் பாலியல் ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பதிலீடாகவும் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக தொண்டு ஸ்தாபன உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக குறிப்பிட்ட காலத் தவணைக்கு பாலியல் சேவை வழங்குவதற்காக உத்தியோகத்தர்களுக்கு பெண்களும் சிறுமிகளும் திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்கள் அங்கு இடம்பெற்றுள்ளதாக மேற்படி ஆய்வறிக்கை கூறுகிறது.
உணவுப்பொருட்களை விநியோகிப்பதில் ஈடுபடுபவர்கள் பெண்களதும் சிறுமிகளதும் தொலைபேசி எண்களைக் கேட்டுப் பெற்று அவர்களது வீட்டிற்கு விஜயம் செய்து அவர்களுடன் ஒரு இரவைக் கழிப்பதற்கு பதிலாக உணவுப் பொருட்களை விநியோகிக்க பேரம் பேசிய சம்பவங்கள் குறித்தும் அறிய முடிவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களின் பாதுகாப்பின்றி இருக்கும் கைம்பெண்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் மற்றும் இடம்பெயர்ந்து வாழும் பெண்கள் ஆகியோரை இந்த உதவி விநியோக உத்தியோகத்தர்கள் பாலியல் சேவை பேரத்திற்காக பெரிதும் குறிவைப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள் ளது.
இந்நிலையில் நிவாரணப் பொருட்களைப் பெற்று விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள சிரியாவைச் சேர்ந்த தொண்டு ஸ்தாபனங்களைச் சேர்ந்த ஆண் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த துஷ்பிரயோக நடவடிக்கை குறித்து சகிப்புத் தன்மை காண்பிக்கப் போவதில்லை என ஐ.நா. முகவர் நிலையங்களும் ஏனைய சர்வதேச தொண்டு ஸ்தாபனங்களும் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment