கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு.
இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல. இன்னும் உலக சுகாதார ஸ்தாபனம் அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை.
இப்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம். உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனாவுக்கு 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment