உலக வங்கியின் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயல்திட்டத்தின் மொத்தமாக ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் டிசெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு வந்து சேரும் - உலக வங்கி அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

உலக வங்கியின் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயல்திட்டத்தின் மொத்தமாக ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் டிசெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு வந்து சேரும் - உலக வங்கி அறிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உலக வங்கி நிதியுதவியளிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் தொகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் டிசெம்பருக்குள் 5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்று விடும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் திங்கட்கிழமை 05.07.2021 வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு தொகுதி ஃபைசர் தடுப்பூசிகள் திங்கட்கிழமை 05.07.2021 கொழும்பை வந்தடைந்தன. அடுத்த சில வாரங்களில் கொண்டு வரப்படவுள்ள 800,000 தடுப்பூசிகளின் முதல் தொகுதியாக இது இருக்கின்றது.

உலக வங்கியின் இலங்கை கொவிட்-19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயல்திட்டத்தின் கீழ் நிதியுதவியளிக்கப்பட்ட மொத்தமாக ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் 2021 டிசம்பர் மாதத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளன.

“இலங்கையர்களுக்கு பாதுகாப்பான, வினைத்திறன் மிக்க தடுப்பூசிகளுக்கான நியாயமான அணுகும் வசதியை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பங்காளர்களுடன் இணைச் செயற்பாட்டினை முதல்தொகுதி தடுப்பூசிகளின் விநியோகம் குறிக்கின்றது” என மாலைதீவுகள், நேபாளம், மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் நாட்டுப் பணிப்பாளர் பாரிஸ் எச். ஹடாட் ஷெர்வோஸ் தெரிவித்துள்ளார்.

“மேலும் பல தடுப்பூசிகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வருட இறுதியில் இலங்கையை வந்தடையும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2021 மே மாதம் இலங்கை அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட கடன் ஒப்பந்தத்தில் நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் உலக வங்கி தடுப்பூசி ஒப்புதலுக்கான இரண்டு அளவுகோல்கள் மூலமாக இந்த தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன.

இலங்கையின் பெருந்தொற்று முகாமைத்தும் மற்றும் தடுப்பு முயற்சிகளுக்கான, இலங்கை கொவிட் அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார முறைமை தயார்படுத்தல் செயற்றிட்டமானது மொத்தமாக 298.07 மில்லியன் டொலர்களில், மேலதிக 80.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தடுப்பூசி ஆதரவுக்கானதாக உள்ளது.

எதிர்பார்க்கப்படும் திட்ட முடிவுகளில் குறுகிய கால அவசர தேவைகளை பூர்த்தி செய்வது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான பணப்பரிமாற்றம், அத்துடன் தொற்றுநோய் தயாரிப்புக்கான சுகாதார அமைப்புகளை நீண்டகாலமாக வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

No comments:

Post a Comment