தடுப்பூசிகளை ஏற்றியவுடன் மக்கள் அலட்சியமாக செயற்படக்கூடாது, ஒரு மாதத்தின் பின்னரே உடலில் நோயெதிர்ப்பு சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கும் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

தடுப்பூசிகளை ஏற்றியவுடன் மக்கள் அலட்சியமாக செயற்படக்கூடாது, ஒரு மாதத்தின் பின்னரே உடலில் நோயெதிர்ப்பு சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கும் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(ஆர்.யசி)

மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் முயற்சிகளில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான எதிர்பாப்புடன் அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான தடுப்பூசிகளே எமக்கு கிடைக்கின்றன. தடுப்பூசிகளின் பற்றாக்குறை தற்போது சிக்கலான நிலையொன்று உருவாகக் காரணமாக உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலை அடுத்து நாடளாவிய ரீதியிலான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் குறித்தும், நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் சகல பகுதிகளிலும் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது, அச்சுறுத்தலான பகுதிகளென அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்கிக் கொண்டுள்ளோம். மேல் மாகாணமே அதிக அச்சுறுத்தல் பகுதியென ஆரம்பத்தில் இருந்து எச்சரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேல் மாகாணத்தில் தடுப்பூசிகளை பகிரும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஆனால் ஏனைய மாகாணங்களுக்கும் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. வட மாகாணத்திற்கு இதுவரையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும். அடுத்த வாரத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத்திட்டத்தை நாம் நிச்சயமாக ஆரம்பிப்போம்.

எமக்கு தடுப்பூசிகள் கிடைக்கும் அளவிற்கே எம்மால் பகிர்ந்து கொடுக்க முடியும். அரசாங்கத்தின் தலையீட்டில் பல்வேறு நாடுகளிடம் தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக் கொள்ளவும், பணத்திற்கு கொள்வனவு செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அனைவரும் எமக்கு வழங்குவதாக கூறிய தொகையை விடவும் குறைவான தடுப்பூசிகளே எமக்குக் கிடைக்கின்றது. மில்லியன் கணக்கிலான தடுப்பூசிகளை நாம் எதிர்பார்த்தும் அவை இலட்சக் கணக்கிலும், ஆயிரக் கணக்கிலுமே பெற்றுக் கொள்ள முடிகின்றது. 

ஆகவே தடுப்பூசி எமக்கு கிடைக்காதமையே எமக்கிருக்கும் பிரதான பிரச்சினையாகும். எதிர்காலத்தில் தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் சகல மாவட்டங்களிலும் சகலருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நாட்டில் சைனோபார்ம், ஸ்புட்னிக், கொவிசீல்ட் ஆகிய தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் தடுப்பூசிகளை ஏற்றியவுடன் அனைத்துமே சரியாகிவிடும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். ஆனால் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டாலும் ஒரு மாதத்தின் பின்னரே உடலில் நோயெதிர்ப்பு சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கும். எனவே அதன் பெறுபேறுகள் சிறிது காலத்தின் பின்னரே வெளிப்படும். ஆகவே தடுப்பூசிகளை ஏற்றியவுடன் மக்கள் அலட்சியமாக செயற்படக்கூடாது. அதேபோல் பல பகுதிகளை நாம் நிராகரிப்பதாக விமர்சனக் கருத்துக்களை முன்வைகின்றனர் . அதுவும் தவறான ஒன்றாகும் என்றார்.

No comments:

Post a Comment