(ஆர்.யசி)
நாடாளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் சாதகமான விதத்தில் வெளிப்படும் என நம்புகின்றோம். ஜூன் மாத இறுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் அச்சுறுத்தல் நிலையில் இருந்து நாடு மீளவில்லை. எனவே மீண்டுமொரு கொவிட் அலை உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தொடர்ச்சியான அழுத்தமும், ஏனைய மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையின் காரணமாக நாடளாவிய ரீதியலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாடு முடக்கப்பட்டாலும் கூட, நாட்டின் தற்போதைய நிலை குறித்து திருப்தியடைய முடியாது. எவ்வாறு இருப்பினும் வீடுகளில் உள்ளவர்களிடம் அதிகளவில் தொற்று அடையாளம் காணப்படுகின்ற காரணத்தினால் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் தொற்றுப்பரவல் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாக வெளிப்படுகின்றது. இது நல்லதொரு நகர்வு என கருதுகின்றோம்.
எனவே எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் வரும் தரவுகளில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும் என்பதை நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனினும் இந்த பயணக்கட்டுபாட்டுக் காலத்தில் அத்தியாவசிய தேவைகள் என கூறிக் கொண்டு மக்கள் வாய்ப்புகளை தவறாக பயன்படுத்துகின்றமை மோசமான செயற்பாடாக பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக இந்த செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றன. அத்தியாவசிய சேவைகள் இல்லாத பல நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தமது ஊழியர்களை பணிகளுக்கு வரவழைக்கின்றனர்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
பொதுமக்களை பொறுத்த வரையில் 80 வீதமான மக்கள் ஒழுக்கமாக, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பயணக்கட்டுப்பாட்டில் வீடுகளில் உள்ளனர். ஆனாலும் 20 வீதமான மக்கள் இன்னமும் நிலைமைகளை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.
இப்போது பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவுகள் ஏற்படலாம். ஆனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகின்றது என்பதற்காக நாடு வழமையான நிலைக்கு திரும்பியுள்ளதென அர்த்தமில்லை. மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அச்சுறுத்தல் நிலையில் நாடு உள்ளது என்றார்.
No comments:
Post a Comment