கொரோனா மீண்டும் தீவிரமடைவதால் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் : ஏதேனுமொரு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு அனைவரும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

கொரோனா மீண்டும் தீவிரமடைவதால் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் : ஏதேனுமொரு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு அனைவரும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். முதல் மூன்று மாத காலத்தில் குழந்தையின் அவயவங்களின் வளர்ச்சி இடம்பெறுவதால், அக்காலப் பகுதியில் எந்தவொரு வைரஸ் தொற்றுக்குள்ளாவதும் விரும்பத்தக்கதல்ல. தொற்று ஏற்படும் பட்சத்தில் உரிய காலத்திற்கு முன்னரே குழந்தை பிறக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதென்பது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் தற்போது வரை 6 வகையான தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் ஏதேனுமொரு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு, அனைவரும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசிகளும், அதனைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு 65 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவிற்கு அவர்களின் நிலை மோசமடைவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகும்.

எனவே தற்போதைய நெருக்கமிக்க சூழ்நிலையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதே மிகவும் முக்கியமானது என்பதுடன், கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

எமது நாட்டில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதியளிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுவதால், பொதுமக்கள் யாவரும் தடுப்பூசியைப் பெறுவதற்குத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை.

அதேவேளை பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதால் உரியவாறு முகக்கவசங்களை அணிவதுடன், அவ்வப்போது சனிட்டைசரை பயன்படுத்த வேண்டும்.

அதுமாத்திரமன்றி சுகாதாரப் பிரிவினரால் கூறப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டும். அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். முதல் மூன்று மாத காலத்தில் குழந்தையின் உறுப்புக்களின் வளர்ச்சி இடம்பெறுவதால், அக்காலப்பகுதியில் எந்தவொரு வைரஸ் தொற்றுக்குள்ளாவதும் விரும்பத்தக்கதல்ல.

அதேபோன்று இறுதி மூன்று மாத காலப்பகுதியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மென்மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொற்று ஏற்படும் பட்சத்தில் உரிய காலத்திற்கு முன்னரே குழந்தை பிறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment