காபூலில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு : 25 பேர் பலி, 52 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

காபூலில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு : 25 பேர் பலி, 52 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வீதிகளில் புத்தகப் பைகள் சிதறி கிடக்கும் புகைப்படங்களை காண முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் காயமடைந்துள்ளதாக கல்வித்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்த தாக்குலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காபூல் நகரின் மேற்கு பகுதியில் உள்ள டாஷ்-இல்-பார்ச்சி என்னும் அந்த பகுதியில் ஷியா ஹாசராஸ் பிரிவினர் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன் இந்த பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

அடுத்த வாரம் நோன்பு பெருநாள் என்பதால் அந்த நகரப்பகுதி பரப்பரப்பாக காணப்பட்டதாக அந்நகர செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பள்ளியில் ஆண், பெண் என இருபாலரும் கல்வி பயில்கின்றனர் என ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் கல்வித் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு, "பள்ளியில் பிரதானமாக பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எதிர்கால ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என" தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தையும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் திரும்ப பெறுவது குறித்த அறிவிப்புக்குப் பின் அதிகரித்துள்ள வன்முறையின் பின்னணியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காபூல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலிபான்கள் நாடு முழுவதும் தாக்குதல்களை அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment