அபிவிருத்தி என்ற பெயரில் அரசாங்கம் திட்டமிட்டு தேசிய வனங்களை அழித்து வருகின்றது. இதற்கு எதிராக வீதிக்கிறங்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் காடழிப்புக்கு எதிராக மக்களை விழிப்பூட்டும் வகையில் இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தா வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த சித்திரப்போட்டியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் திட்டமிட்டு சூழலை அழித்துவருவது நாட்டில் இன்று பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் சூழலை அழிப்பதை தலைப்பாகக் கொண்டு, அது தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் சித்திரப் போட்டியொன்றை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் பல இடங்களிலும் தேசிய வளங்களை அழித்து வருகின்றது. சிங்கராஜ வனம் உட்பட பல வனங்களில் பாரியளவில் காடழிப்பு இடம்பெற்றிருக்கின்றது.
தேசிய வளங்களை பாதுகாப்பது நம் அனைவரதும் கடமையாகும். அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வீதிக்கிறங்கி போராடவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
சூழலை பாதுகாக்க ஒரு சில அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களை அடக்கி, அவர்களுக்கு எதிராக அமைச்சர்கள் செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம்.
அதேபோன்று எப்லடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறித்த தேங்காய் எண்ணெய்யை கொண்டுவந்தவர்களை கைது செய்து விசாரிக்கவும் இல்லை. நாட்டுக்குள் பாேதுமானளவு தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான வளம் இருந்தும், தரம் குறைந்த தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்ய இடமளித்திருப்பது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.
அத்துடன் இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பலகாரங்களை சமைப்பதற்கும் மக்கள் அச்சப்படுகின்றனர். மக்களின் இந்த அச்சத்தை போக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. மக்களின் இந்த நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment