ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஒக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் - தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஒக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் - தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஒக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது பற்றி தீர்மானிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் கலந்து கொண்டனர். தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, பா.ஜ.க. சார்பில் முருகன், கே.டி.ராகவன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, ஜெயக்குமார் பங்கேற்றனர்.

பா.ம.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், தே.மு.தி,க. சார்பில் பாலாஜி, அன்புராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

கூட்டத்தில் நாடு முழுவதும் ஒக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள யோசனை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

ஒவ்வொரு கட்சி சார்பிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் தேவை மிகவும் அவசியமாகிறது. ஆனால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் ஒக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகவும் வேதனை தருவதாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் மட்டும் தயாரிக்க அரசு அனுமதிக்கலாம். அதுவும் 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஒக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம். இதை கண்காணிப்பதற்கு உள்ளூர் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘ஆலையை திறப்பது அரசின் நோக்கம் அல்ல. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், உயிர் காக்கும் ஒக்சிஜன் சிலிண்டர் ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் தட்டுப்பாடின்றி தேவைப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் தயாரிக்க யோசனை வழங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டி உள்ளது. ஆலையை திறப்பது அரசின் நோக்கம் கிடையாது. ஆனாலும் 4 மாதத்துக்கு மட்டும் ஒக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்ற உங்களது கோரிக்கைதான் எங்களது யோசனையாகவும் உள்ளது’’ என்றார்.

அவ்வாறு ஒக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கும்போது அதை உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிக்கலாம் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அதையும் முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஒக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சி சார்பிலும் கேட்டுக் கொண்டனர். அதற்கும் அரசின் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு குழுவில் உள்ளூர் பிரதிநிதிகளுடன், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம்பெற வேண்டும். அவர்கள் முழுமையாக தொழிற்சாலையை கண்காணிக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக சட்டமா அதிபர் மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment