மூன்றாவது அலை அச்சத்தால் முடக்கப்பட்டது பிரான்ஸ் - கட்டுப்பாடுகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

மூன்றாவது அலை அச்சத்தால் முடக்கப்பட்டது பிரான்ஸ் - கட்டுப்பாடுகள் குறைப்பு

கொரானா தொற்றின் மூன்றாம் அலைத் தாக்கம் பற்றிய அச்சம் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரு மாத கால பொது முடக்கநிலை கொண்டுவரப்படுகிறது.

இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் பிரான்ஸின் சுமார் 12 மில்லியன் பேர் வாழும் 16 பகுதிகளில் இந்த நடவடிக்கை அமுலுக்கு வந்தது.

எனினும் இது முந்தைய கட்டுப்பாடுகள் அளவுக்கு இருக்காது என்று குறிப்பிட்ட பிரான்ஸ் பிரதமர் ஜீன் கஸ்டெக்ஸ், மக்கள் வெளிப்பகுதியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 35,000 க்கும் அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

நாட்டில் மூன்றாவது அலை நோய்த்தொற்று தாக்கம் அதிகரித்திருப்பதாக கஸ்டெக்ஸ் தெரிவித்தார்.

குறிப்பாக பாரிஸ் நகரின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அங்கு 1,200 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இது கடந்த நவம்பரில் ஏற்பட்ட இரண்டாம் அலைத் தாக்கத்தை விடவும் அதிக எண்ணிக்கை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியர் வெரன் தெரிவித்தார்.

இந்த புதிய நடவடிக்கையின்படி அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்படுகின்றபோதும் பாடசாலைகள் தொடர்ந்து திறக்கப்பட்டு இருக்கும். 

மக்கள் தமது வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் பகுதிக்கு உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 

நியாயமான காரணம் இன்றி வேறு பகுதிகளுக்கு பயணிப்பதும் தடுக்கப்படுகிறது.

பிரான்ஸின் தேசிய அளவிலான இரவு நேர ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும். எனினும் பகல் நேரத்தை அதிகரிக்கும் வகையில் அது ஒரு மணி நேரம் தாமதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் தடுப்புசி வழங்கும் செயற்பாடு மந்தமாக இடம்பெறுவதாக விமர்சனங்கள் உள்ள நிலையிலேயே அந்நாட்டில் மூன்றாம் அலைத் தாக்கம் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment