(இராஜதுரை ஹஷான்)
இலங்கையில் மனித உரிமை மீறள்கள் ஏதும் இடம்பெறவில்லை. இராணுவத்தினர் யுத்த கோட்பாடுகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுப்பட்டார்கள். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை விவகாரத்தில் அக்கறை கொள்ளாமல் சர்வதேச நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை கொள்வது தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாகும். அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 30 வருட கால யுத்தம் அனைத்து இன மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பிறகே தேசிய நல்லிணக்கம் உறுதிப்படத்தப்பட்டது.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த குறுகிய காலத்தில் பல திட்டங்களை முன்னெடுத்தார்.
யுத்தம் முடிவடைந்த பிறகு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பில் சர்வதே அரங்கில் பேசப்படவில்லை. அரசியல் நோக்கங்களை கொண்டு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குள் அதிகளவில் பேசப்பட்டுள்ளன.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெறவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்த கோட்பாடுகளுக்கு அமையவே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்டோரது உறவினர்கள் ஒரு தரப்பினரது கோரிக்கைக்கு அமைய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து அவதானம் செலுத்துவதை விடுத்து சர்வதே நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை குற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அரசாங்கம் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து ஒன்றினைத்து செயற்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment