இலங்கை அரசின் விசாரணை முடிவிற்காக காத்திருக்கிறோம் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

இலங்கை அரசின் விசாரணை முடிவிற்காக காத்திருக்கிறோம் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

தமிழகத்தின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள், கடந்த மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை கடற்படையின் படகுடன் விபத்திற்குள்ளானதில் இந்திய மீனவர்களின் படகு மூழ்கியது. இதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்த கேள்விகள், இந்திய பாராளுமன்றத்தில் நேற்று எழுந்தன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த துயர சம்பவத்தில், இலங்கைக்கு நாம் நமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அதன் பலனாக அவர்கள் ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அந்த விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம். 

அதே நேரத்தில் இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக மிக கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது இலங்கையில் இந்திய மீனவர்கள் எவரும் சிறையில் இல்லை. சமீப காலம் வரை 9 பேர் சிறையில் இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, அங்கு இந்திய மீனவர்களின் 62 படகுகள் உள்ளன. அவற்றை இலங்கையின் காவலில் இருந்து விடுவிக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

முன்பு 173 படகுகள் இருந்தன. அவற்றில் 36 படகுகள் மீட்கப்படக் கூடியவை. மீட்க முடியாத படகுகளுக்கான ஏல நடைமுறைகள் தற்போது விவாதத்தில் உள்ளன.

எவற்றை திரும்ப பெற முடியுமோ, அவற்றை திரும்பப் பெறுவோம். எவற்றை மீட்க முடியுமோ அவற்றை மீட்போம். அதற்கான முயற்சி எடுக்கிறோம். மீட்பை விரைவு படுத்துவோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிக கூடுதலான முன்னுரிமையை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கையால் பிடிக்கப்படுவது பற்றிய தகவல் கிடைக்கிறபோதெல்லாம், தூதரக ரீதியில் இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச் செல்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

(தினத்தந்தி)

No comments:

Post a Comment