சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரஸா அதிபர் ஆகியோருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரஸா அதிபர் ஆகியோருக்கு விளக்கமறியல்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளத்திலுள்ள மத்ரஸா அதிபர் மொஹமட் ஷகீல் ஆகியோருக்கு எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு எனத் தெரிவித்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக CID யினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்றையதினம் (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் நேற்றையதினம் (17) அறிவுறுத்தல் வழங்கியிருந்ததற்கமைய, அவர் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) (h) பிரிவு மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பான சட்டத்தின் 3 (1) பிரிவின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபருக்கு, சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

இதேவேளை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்து, புத்தளம் மத்ரஸா அதிபர் மொஹமட் ஷக்கீலை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் விடுத்த அறிவுறுத்தலுக்கமைய, CID அதிகாரிகளால் அவர் நேற்றையதினம் (17) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment