நாட்டில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா தொற்றுக்கான துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி பல்பொருள் அங்காடிகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட அதிகளவானோர் செல்லக்கூடிய இடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியேறும் தரப்பினருக்காக 11 இடங்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒரு வகை கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி பெப்ரவரி மாதமளவில் கண்டிப்பாக நாட்டுக்கு கொண்டு வரப்படுமென கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை நோயாளிகளுக்கு முறைப்படி வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இராணுவத்தினரின் தலைமையில் முன்னோடி நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment