கொழும்பில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மீண்டும் முடக்கப்படும் நிலையேற்படும் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

கொழும்பில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மீண்டும் முடக்கப்படும் நிலையேற்படும் : பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி)

கொழும்பில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படுவார்களாயின், மீண்டும் அந்த பகுதிகளில் புதிய வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் அப்பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு வடக்கு மற்றும் மத்திய கொழும்பு பகுதிகளில் நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. 

எனினும் அந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை பின்பற்றுமாறு அறிவுருத்தப்பட்டிருந்தது. இந்த விதிமுறைகளை அப்பகுதி மக்கள் உரியமுறையில் பின்பற்றுகின்றார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது. சுகாதார சட்ட விதிகளுக்கு புறம்பாக ஒன்றுகூடி கலந்துரையாடல்களில் ஈடுபட, உணவு உட்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால், அந்த பகுதிகளில் மீண்டும் கொவிட்-19 வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் அப்பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய கடந்த 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் இதுவரையில் 2,471 பேர் இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 47 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

அதற்கமைய மேல் மாகாணத்திலுள்ள மீன் சந்தைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளின் போது, 603 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3 பேருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல் மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் முகக் கவசம் அணியாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 திகதி முதல் இதுவரையில் 2,462 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 2,300 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment