(எம்.எப்.எம்.பஸீர்)
போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் தொம்பே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கடுவலை பகுதியில் வைத்து வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரபாத் குணவர்தனவே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் அவரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கடுவலை நீதிவான் மஞ்சுள ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்த நிலையில், அவர் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அத்துருகிரிய பகுதியில் வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் நேற்று காலை நடாத்திய விஷேட சுற்றி வலைப்பொன்றில் மென்டி ரக போதைப் பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.
அவர் பிரதான பொலிஸ் பரிசோதகருடன் தொடர்பில் இருந்துள்ளமையும், போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி உதவி ஒத்தாசை புரிந்துள்ளமை தொடர்பில் தொலைபேசி தரவுகள் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சொகுசு கார் ஒன்றில் கடுவலை பகுதியில் பயணிக்கும் போது கைது செய்யப்பட்டிருந்த குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment