(நா.தனுஜா)
அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் ஏற்கனவே என்னிடம் கூறியிருந்தார். இது குறித்து பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் விரைவில் பேச்சு வார்த்தைக்கு நேரமொன்றை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதமர் அது குறித்து பிரத்யேகமாக எதனையும் கூறவில்லை. ஆனால் ஏற்கனவே என்னுடன் முன்னர் பேசிய சந்தர்ப்பங்களில் புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் பேச வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். ஆகவே அதனை மனதிலிருத்தியே கூட்டமைப்புடன் விரைவில் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இதன்போது நாம் எப்போதும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அதற்கான நேரமொன்றை வழங்குமாறும் நான் அவரிடம் கூறினேன். அப்போது ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எமக்கு நேரமொன்றை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்னரும் ஜனாதிபதியுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். எனினும் தேர்தலின் பின்னர் இவ்விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் உத்தியோகபூர்வமாக பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே பிரதமரின் அபிப்பிராயமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment