தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விசேட அமர்வு வியாழக்கிழமை சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் கலந்துகொண்டிருந்த அமர்வில் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
வாதப் பிரதிவாதங்கள் இன்றி அனைத்து உறுப்பினர்களின் எகோபித்த ஆதரவுடன் இவ்வரவு செலவுத் திட்ட அறிக்கை சபையில் நிறைவேற்றப்பட்டது.
21 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 04 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 02 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 02 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர்.
மேற்படி வரவு செலவுத் திட்ட விசேட கூட்டத்தினைப் பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment