(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும், சீனாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக சபையில் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இவ்வாறான குறுகிய கால கடன்களினால் வெகு விரைவில் நாடே கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சகல துறைகளும் இன்று வீழ்ச்சி கண்டுள்ளது, சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது, ஆனால் நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச முதலீடுகளை கூறி ஏமாற்றுகின்றனர். சர்வதேச தரவுகளுக்கு அமைய எமக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் எம்மை தரப்படுத்தலில் கீழ் நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
எனவே நாட்டில் பொய்யான தரவுகளை கூறி சார்வதேச முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் கடன் நெருக்கடி மோசமான நிலையில் தலைதூகிக் கொண்டுள்ளது. கையிருப்பு 5.8 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
நாம் உருவாக்கிய திட்டத்தில்தான் இந்த அரசாங்கமும் கடன்களை செலுத்தியது. ஆனால் தாமாக புதிய வேலைத் திட்டங்களை உருவாக்கியுள்ளதாக பொய்களை கூறுகின்றனர்.
இன்று அரசாங்கம் குறுகியகால கடன்களை பெற்று நிலைமைகளை சமாளிகின்றது. இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டது, இப்போது அமெரிக்காவிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளும் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு விரைவில் அந்த கடன்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். அதேபோல் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இவ்வாறான குறுகிய கால கடன்களினால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் மோசமான கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உருவாகும் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment