(இராஜதுரை ஹஷான்)
ஊழியர் சேமலாப நிதியம், உள்ளிட்ட இதர காரணிகளால் நியமனம் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு இம்மாதத்துக்குள் நியமனம் வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்தார்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பல பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம், வயதெல்லை போன்ற காரணங்களை குறிப்பிட்டு பல பட்டதாரிகளின் நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நியமனம் இரத்து செய்யப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி விண்ணப்பம் கோரப்பட்டது. கடந்த மாதம் 19ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை அரச சேவைகள் மாகாண சபை அமைச்சுடன் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீள் நியமனம் வழங்கவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் இம்மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் மாத்திரமே இடம்பெற்ற வண்ணம் உள்ளது. சாதகமான தீர்வு ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இம்மாதம் 22 ஆம் திகதி பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment