வவுனியா குழுமாட்டுச்சந்தி - மரக்காரம்பளை வீதி 3.40 கிலோ மீற்றர் தூரத்திற்கு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் காரணமாக வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலைமையில் காணப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியினையடுத்து அம்மின்சார தூண்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் சீன அரச கட்டுமாண பொறியியல் நிறுவனத்தினால் 3.40 கிலோ மீற்றர் நீளமான குழுமாட்டுச்சந்தி - மரக்காரம்பளை வீதி செப்பனிடப்படும் பணிகள் கடந்த மார்ச் 10 அன்று தொடக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வபிவிருத்தி பணியின்போது பயன்படுத்தப்படும் வீதியில் மண், கற்களை அழுத்தும் இயந்திரத்தின் செயற்பாட்டின் போது வீதியோர பழமையான மின்சார தூண்கள் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதுடன், சில தூண்கள் பாதையிலும் காணப்பட்டன. பல தூண்களின் கம்பிகள் வெளியே தெரிவதால் அதனூடாக மின்சாரம் தாக்கும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார தூண்கள் வீழ்ந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர் இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இன்று (17) அத்தூண்களை அகற்றும் செயற்பாட்டில் வவுனியா மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார சபையினரின் இச்செயற்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
(வவுனியா விசேட நிருபர்)
No comments:
Post a Comment