தீப்பிடித்த கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 3, 2020

தீப்பிடித்த கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

தீப்பற்றி எரியும் பானாமா நாட்டுக் கப்பலில் இருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (3) மாலை 5 மணியளவில் கல்முனை வாடி வீட்டு கடற்கரையோரத்திற்கு ஆழ்கடல் பகுதியில் இருந்து கடற்படையினரின் தாக்குதல் படகு ஒன்றின் ஊடாக தீ பற்றிய கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர் பின்னர் ரோலர் படகு ஒன்றில் கடற்கரை பகுதிக்கு கடற்படையினரால் அழைத்து வரப்பட்டார்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட நபர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கதறியதை அவதானிக்க முடிந்ததுடன் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் குறித்த நபர் பாதுகாப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 1990 அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் மீட்கப்பட்ட நபர் சுமார் 57 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் எல்மோர் என்ற பெயரை உடைய பிலிப்பைன்ஸ் நாட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீப்பற்றி எரிந்து கொண்டுள்ள கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உட்பட 18 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் இன்று காலை 7.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

பனாமா அரசுக்கு சொந்தமான எம்.ரி. நியூ டையமன்ட் “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment