(இராஜதுரை ஹஷான்)
எதிர்காலத்தின் மிகப்பெரிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு துறைமுக நகரம் காணப்படும் என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இத் திட்டத்தினூடாக 83000 தொழில் வாய்ப்புக்களை இலங்கை பிரஜைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.
துறைமுக நகர அபிவிருத்தி செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 வருட காலம் நிறைவுபெற்றுள்ள நிலையில் பிரதமர் இன்று கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளை பார்வையிட்டார். இவ்விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
2014 செப்டெம்பர் 17 ஆம் திகதி சீன ஜனாதிபதியுடன் இணைந்து கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுடன் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் ஒரு சில முறையற்ற செயற்பாடுகளினால் அபிவிருத்தி நிர்மாணிகள் இரண்டு வருட காலம் தடைப்பட்டன. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நிர்மாண அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தின் மிக பெரிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு துறைமுக நகரம் காணப்படும். 83000 தொழில் வாய்ப்புக்களை இலங்கை பிரஜைகள் இத்திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான மொத்த முதலீடு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுக்கும் சீன நிறுவனத்துக்கும், சீன அரசாங்கத்துக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநரேம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சீனாவின் தேசிய தினமும், சீனாவின் கம்யூனிச கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 100 வருடமும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment