கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இக்குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதிவாதிகளை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 500,000 ரூபா கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கும், குறித்த இரண்டு பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
பிணையாளர்கள் நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவர்கள் என கிராம சேவையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் பொலிஸ் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதற்கு முன்னர் ஒரு தடவை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத சந்தர்ப்பம் பதிவாகியுள்ளதால், அவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பொலிஸில் முன்னிலையாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதுபோன்ற நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பிரதிவாதிகள் இருவரையும் வெளிநாடு செல்ல தடை விதித்ததோடு, அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அதனை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் போலி தாடி அணிந்து மாறுவேடமிட்டு பங்கேற்ற இரண்டு நபர்களும் இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment